Breaking News

தீர்வு தேடும் சேவையில் சிறிதரன்

மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் தீர்வு தேடும் சேவை கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் முதலாவது கிராம அலுவலர் பிரிவான கே.என்.01 வன்னேரிக்குளத்தில் மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இக்கிராமிய நடமாடும் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வன்னேரிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சோலை, குஞ்சுக்குளம், ஜயனார்புரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் சுகாதாரம், குடிநீர், கல்வி, வீதிகள், விவசாயம், மின்சாரம், நீர்விநியோகம் போன்ற மிக முக்கிய விடயங்களின் அடிப்படையில் இந்தப்பிரதேசத்தில் காணப்படுகின்ற விவசாயச்செய்கை தொடர்பான பிரச்சனைகள்,

நிலம் உவராதல், வைத்தியசாலைக்கு வைத்தியர் நியமிக்கப்படாமை, இலங்கைப்போக்குவரத்துச்சபையின் சீரற்ற போக்குவரத்தினால் வன்னேரிக்குளம் ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கப்படுதல், வீதி புனரமைப்பு, வாழ்வாதார உதவிகளை பங்கீடு செய்தலில் கடந்த காலங்களில் ஏற்பட்ட முறைகேடுகள் போன்ற பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. பொது மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பதிலளிக்கையில் பிரதான பிரச்சனைகளுக்கு அடுத்துவரும் மூன்று மாத காலத்துக்குள் படிப்படியாக தீர்வுகள் பெற்றுத்தரப்படும் எனவும் கூறினார்.

மாவட்டம் தழுவிய வகையில் இத்தகைய கிராமிய ரீதியான சந்திப்புக்களை நிகழ்த்தி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை அறியவும் அதற்கான தீர்வுகளை கண்டறியும் இத்தகைய சந்திப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

கரைச்சிப்பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் வன்னேரிக்குளம் கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபையின் நிர்வாக உத்தியோகத்தர், ஜயனார்புரம் பாடசாலையின் முதல்வர், தமிழரசுக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். கலந்துரையாடலைத் தொடர்ந்து வன்னேரி அக்கராயன் பிரதேசங்களில் சட்டவிரோத மண் அகழ்வு அதனால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு நிலைமைகள் குறித்து நேரடியாக பார்வையிடப்பட்டது.