சைலன்ஸ் இன் த கோட் திரைப்படம் மீதான இடைக்கால தடை நீக்கப்பட்டது
பிரசன்ன விதானகேவின் சைலன்ஸ் இன் த கோட் (Silence in the Courts) என்ற ஆவணத் திரைப்படத்தை வௌியிட, விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை விலக்கிக்கொள்ள நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த திரைப்படம் மீதான இடைக்காலத் தடையை நீக்குவதா இல்லையா எனபது தொடர்பில் இன்று அறிவிப்பதாக, கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.ஏ.குணவர்த்தன நேற்று தெரிவித்தார்.
இதன்படி குறித்த திரைப்படத்திற்கு இன்று வரை நீடிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை விலக்கிக்கொள்வதாக கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.ஏ.குணவர்த்தன இன்று உத்தரவிட்டார்.
குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இரு பெண்கள் நீதிபதி ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் ஆவணத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், குறித்த ஆவணத் திரைப்படத்தின் மூலம் தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இயக்குனர் கூற முற்பட்டுள்ளதாகவும், இந்த திரைப்படம் வௌியானால் தனக்கு மட்டுமல்ல இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்புக்கே அபகீர்த்தி ஏற்படும் எனவும் கூறி, முன்னாள் நீதியரசர் லெனின் ரத்நாயக்கவினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த 5ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சம்பந்தப்பட்ட ஆவணத் திரைப்படத்தை வௌியிட, 19ம் திகதி வரை விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை இன்று (21) வரை மீண்டும் நீடிப்பதாக நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய பிரசன்ன விதானகே உள்ளிட்ட எட்டுப் பேரை பிரதிவாதிகளாக பெயரிட்டு முன்னாள் நீதிபதி லெனின் ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனையடுத்து இன்றைய வழக்கு விசாரணையின் போது இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதி சைலன்ஸ் இன் த கோட் (Silence in the Courts) என்ற ஆவணத் திரைப்படத்தை வௌியிட, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.