Breaking News

நேர மாற்றங்களுடன் பாடசாலைகள் 2 ஆம் கட்டத்தின் கீழ் இன்று மீண்டும் ஆரம்பம்!

கொவிட்-19 காரணமாக மூன்று மாதங்களுக்கு பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

கடந்த 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் என்.எம்.எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார். 

இதற்கமைய இன்றைய தினம் 5, 11 மற்றும் 13 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். 

பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் 11 மற்றும் 13 ஆம் தரங்களில்; கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் பாடசாலை நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது. 

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சகல ஆசிரியர்களும் காலை 7.30 க்கு பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

கற்பிக்கும் பாடநெறி ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் அவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்தல் போதுமானது எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எம்.எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார். 

இதேவேளை மூன்றாம் கட்டமாக எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 12 மற்றும் 10 தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளனர். 

அடுத்த மாதம் 27 ஆம் திகதி முதல் 3,4,6,7,8 மற்றும் 9ம் தரங்களில் பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இறுதி கட்டமாக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தரம் 1, 2 மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளன. 

சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே இவ்வாறு மாணவர்கள் கட்டம் கட்டமாக பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.