Breaking News

ரத்தம் உறையாமை நோய்க்கான அறிகுறிகள்!

 


காயம் ஏற்படும்போது ரத்தம் வழியும். சில நிமிடங்களில் ரத்தம் வெளியேறுவது தானாகவே நின்றுவிடும் அல்லவா? அப்படி ரத்தம் வெளியேறுவது நிற்காமல், தொடர்ந்து வெளியேறினால்? அதுதான் ரத்தம் உறையாமை நோய். 

ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டுவிடும். இது மரபியல் கோளாறு காரணமாக ஏற்படும் நோய். உலகில் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்நோய் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் இந்த நோய் ஏற்படலாம். 

எனவே, இதை பரம்பரை நோய் என்கிறார்கள். ரத்த உறவில் திருமணம் செய்வதன் மூலம், இந்நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். தாயின் கருவில் உருவாகும் குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கும் குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாடே இந்நோய் ஏற்படக் காரணம். இந்த நோய் உள்ளவர்கள் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். 

உடலில் எங்கும் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயம் காரணமாக ஏற்படும் ரத்தக்கசிவு சிக்கலை உண்டாக்கிவிடும். சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமல்கூட ரத்தக்கசிவு ஏற்படலாம் என்கிறார்கள், நிபுணர்கள். இந்த நோயை எப்படி கண்டுபிடிப்பது? எனக்கேட்டால், பிறந்த குழந்தைக்கு தொப்புள்கொடி விழுந்த பிறகு ரத்தம் நிற்காமல் வெளியேறுவது, பல் விழுந்த பிறகு அல்லது பல் எடுத்த பிறகு தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்படுவது, உடலில் எங்கேயாவது காயம் ஏற்பட்டு ரத்தக்கசிவு நிற்காமல் இருப்பது, உடலில் நீல நிற தழும்புகள் தோன்றி மறைவது, கால் மூட்டுகள் மீண்டும் மீண்டும் வீங்கி வலிப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் ரத்தம் உறையாமை நோய் இருக்கலாம். 

இந்நோயைக் குணப்படுத்துவது மிகவும் கடினம். ரத்தம், பிளாஸ்மா செலுத்துவது மற்றும் உறை நிலை மருந்துகளைச் செலுத்துவது என முறையான சிகிச்சையின் மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.