Breaking News

2016- புத்தாண்டு இராசி பலன்கள்- துலா ராசி



தற்போது குருபகவான்

உங்களுக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார். இது 2016 ஆகஸ்டு மாதம் வரை தொடரும்.உங்களுக்கு சாதகமான சஞ்சாரம் என்பதால், நற்பலன்களாக நிகழ்ந்து வரும். வருகிற ஆகஸ்டு மாதம் முதல்,குரு பகவான், விரய ஸ்தானமான 12-ம் இடத்துக்குப் போவதால், நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-மிடத்திலும், ராகு உங்கள் ராசிக்கு 11-மிடத்திலும், கேது 5 –மிடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

தற்போது, இந்த ஆண்டின் தொடக்கம் முதல் ஆகஸ்டு மாதம் வரை, குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். இத்தகு யோகமான குருபலன் இந்த வருடம் ஜூலை மாதம் 4-ம் தேதிவரை நீடிக்கும். குருபகவான் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். 

ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம் தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள், நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.

குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை ,வருத்தம் யாவும் அகலும். குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள், தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், நிறைவேற்றுவீர்கள். 

 சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.

எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன் காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது.

காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். கருத்துவேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். 

சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள். தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகல சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும். இப்படியாக குருபகவானின் சஞ்சாரம் ஜூலை மாதம் 4-ம் தேதிவரைதான் சிறப்பாக இருக்கும்.

அதன்பிறகு ஆகஸ்டு மாதம் முதல் குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்குப் போவதால், எதைத் தொட்டாலும் விரயமாகவே இருக்கும். இதுவரை கூறப்பட்ட பலன்களுக்கு எதிரிடையான பலன்களாகவே நடக்கும். குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுடைய ஊக்கம் குறையும். அலுப்பும் சலிப்புமே அதிகரிக்கும். ஊட்டம் குறைந்து உடல் பலவீனமாகும். உடல்நலத்தில் சின்ன சின்னக் குறைகள் தோன்றும். ஈரல் கோளாறுகளும், செரிமானக் கோளாறுகளும் ஏற்படும். சர்க்கரை வியாதி, கொலாஸ்ட்ரல் முதலிய வியாதிகள் வரும். சிகிச்சையின்மூலம் பணம் கரையும். வேலை நெருக்கடிகளையும் அலைக்கழிப்புகளையும் சந்திப்பதால், நேரா நேரத்துக்கு சாப்பிட முடியாமல் போகும். 

கடினமான உழைப்பால் உடம்பில் உளைச்சல் உண்டாவது சகஜம் என்றாகிவிடும். பணம் ஏராளமாக செலவாகும். பணம் ஒன்றுக்கு இரண்டாக செலவழியும். வழக்கமான செலவுகளே வரம்பு மீறிவிடும். புதிய செலவினங்களும் கிளம்பி, வாட்டி வதைக்கும். குடும்பசெலவுகள், பிள்ளைகளுக்கான பலவித செலவுகள், உறவினர் வகையில் விஷேஷங்களுக்கான செலவுகள் என்று சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வரவேண்டிய பணம் சரியான சமயத்தில் கைக்கு வராததால், ஏகப்பட்ட நெருக்கடிகளில் சிக்கி ,அவஸ்தைக்குள்ளாவீர்கள். உங்கள் மதிப்பு மரியாதை குறையும் அளவுக்குப் போய்விடும். சொந்த பந்தங்களின் சுபகாரிய சீர்வரிசைக்கெல்லாம் செலவு செய்யவேண்டி நேர்வதால் திணறுவீர்கள். 

பொன்னாபரணங்களை அடமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வட்டிகட்ட முடியாமல் நகைகளை விற்கும் நிலை ஏற்படும். கூடிவந்த திருமணம்கூட தடைப்படும். தம்பதியர் ஒற்றுமை குறையும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பிள்ளைகளால் சஞ்சலம் உண்டாகும். தூர தேசங்களில் பிள்ளைகளைப் பிரிந்திருக்க நேரும். மனதில் நிம்மதி இருக்காது. புகழ் மங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். திருமணத் தடை, பிள்ளைகள் பிரச்சினை, பணியிடத்தில் அவமானம் வியாபார நஷ்டம் என்று தொல்லைகள் பல இருக்கும

குருவின் 12-மிட சஞ்சாரத்தால் நீங்கள் பலவிதத்தில் சிரமப்பட நேர்ந்தாலும் சில நன்மைகளையும் அடைவீர்கள். 12-மிடத்தில் சஞ்சரிக்கும் குருபகவானின் அருள் நிறைந்த பார்வைர்களில் ஒரு பார்வை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் விழுகிறது. இதனால் கல்வி மேம்படும். வித்தைகள் விருத்தியாகும். தாயாருக்கு உடல்நலம் சிறக்கும். இடம்,குடியிருப்பு, மனை, வீடு, தோட்டம், இதர சொத்துக்கள் ஆகியவற்றை பெருக்கிக்கொள்ள முடியும். குருபகவானின் மற்ற பார்வைகள் 6 மற்றும் 8 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், வியாதிகள் மட்டுப்படும். கடன், நோய்கள் குறையும். வழக்கு, விவகாரங்களை எதிர்கொண்டு வெற்றிகொள்ள முடியும். எனவே ஒரேயடியாக துவண்டுபோகவேண்டிய அவசியமில்லை. அவ்வப்போது குருவின் சுபப் பார்வை ஒளி வீசும்

.அடுத்தபடியாக சனிபகவானின் சஞ்சாரத்தைப் பார்க்கும்போது, நீங்கள் ஏழரைச் சனியின் பிடியில் இருந்தாலும், உங்களுக்கு ஏழரைச்சனி, இந்த சஞ்சாரத்துடன் விலகப் போவதால், உங்களுக்கு ஒரு உன்னத வாழ்வைக் கட்டாயம் கொடுத்துவிட்டுத்தான் போவார். உங்களுக்கு நற்பலன்களாக நிகழும். தொழில் சிறக்கும். லாபம் பெருகும். நின்றுபோன திருமணங்கள் நடந்தேறும். 

 பணியிடங்களில் மேலதிகாரிகளின் பாராட்டும் விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். கணவன்-மனைவி உறவு சிறக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பும் கிடைக்கும். ஆரோக்கியம் சிறக்கும். எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றிபெறும். வழக்குகள் சாதகமாக வெற்றியடையும். கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். இப்படியான நற்பலன்களுடன் இந்த ஆண்டு இனிதே முடியும்.

இந்த வருடம் சனி உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில்சஞ்சரிப்பதால், பெரும் அளவில் பண விரயம் அல்லது பெரும் தொகையை மோசடியால் இழக்க நேரும். பொருளாதாரம் கெடும். தரித்திரம் தாண்டவமாடும். மனைவி மக்களுக்கு உடல்நலம் கெடும். பணியாட்கள் , வேலையாட்கள் உங்களை விட்டுப் பிரிவர். மான, கௌரவ பங்கம் வீட்டைவிட்டுக் கட்டாயமக வெளியேற வேண்டியது போன்றவை உண்டாகும். 

பிறரால் ஏவல், சூன்யம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். பெரியோர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வரும். நேத்திர ரோகம் ஏற்படும். இவருக்கு இச்சமயம் இன்னொரு மனைவியும் அமையலாம். மனைவியால் ஏமாற்றம் ஏற்படுவதும் உண்டு . சொத்தில் பெரும் பகுதியும் நஷ்டம் ஆகும். சந்ததிக்கு தொல்லையும் அவரால் இவர்களுக்கு கஷ்டமும் ஏற்படும். ஆரோக்கியம் கெடும் தோற்றப் பொலிவு மறையும். ஆண்மையும் வலிமையும் குறையும். முறை மாறின வழிகளில் பணம் சம்பாதிக்க வேண்டியது வரும். பதவி நாசம் , நிர்ப்பந்த இடமாற்றம் ஆகியவை தோன்றுகின்றது. 

மனக் கிலேசம், தேவையற்ற சண்டை, உறவினருடன் பகை ஆகியவை ஏற்படுகின்றது. பணப் பற்றாக்குறையால், பிறரிடம் சென்று கடன் பெற்றாலும், அதனால் பயனடைய முடியாமல் வேறு வழிகளில் அது வீண் விரயமாகி விடுகின்றது. இது 7 1/2ச் சனியின் கடைசிப் பகுதி. மூன்றாம் சுற்றாகி, மாரக தசை, ஆயுர்தாய ஆயுள் முடிவு கூடி வந்து , ஜென்ம சனியில் எதுவும் நேராவிட்டால், இப்பொழுது மாரக பயம் ஏற்படுவதுண்டு. 2-ல் சனி எவ்வகையிலும் அசுபனே.

பெண்களுக்கு உடல் நலனில் கவனம் தேவை. குடும்பப் பிரச்சினைகள் அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டேதான் இருக்கும். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அவரது மேல் அதிகாரிகளின் தொந்தரவுகள் அல்லது தவறான அணுகுமுறையால், தேவையற்ற பயமும், வெளியில் சொல்லமுடியாத சில பிரச்சினைகளும் அடிக்கடி வந்தவண்ணம் இருக்கும். இதற்கு 10-மிட குருவானவரும் துணை நிற்பார். எனவே ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவதே சாலச் சிறந்தது. மேலும் யாரிடமும் எதையும் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. 

நீங்கள் கூறும் எதார்த்தமான கருத்தை அல்லது வார்த்தையை பிறர் தவறாக எடுத்துக்கொள்வதோடு உங்களுக்கே அது வினையாகிவிடும். எனவே எவரிடமும் எச்சரிக்கையாகவே பழகுங்கள். கணவன்-மனைவி ஒற்றுமை சற்று குறைவுபடும். எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால், மிகவும் பாதிப்படையும். வீட்டு சுமையோடு அலுவலகச் சுமையும் சற்று அதிகரிக்கவே செய்யும். இவையெல்லாம் வரும் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கு மேல் பாதியாகக் குறையத் தொடங்கும்.











அதன்பிறகு உங்களுடைய உழைப்பு மற்றும் வார்த்தைக்கு வீட்டிலும் வெளிவட்டாரத்திலும் நன்மதிப்பும் பாராட்டும் கிடைக்கும். குருவின் 11-மிட மாற்றத்திற்குப் பின் கணவரும் குழந்தைகளும் உங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். பிள்ளைகளுக்கு கல்வியில் இதுநாள்வரை ஏற்பட்ட ஆர்வமின்மை மாறி கல்வியில் மற்றும் பிற நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார்கள். பொருளாதாரத் தடைகளும் இந்த குரு மாற்றத்திற்குப் பின் மெள்ள மெள்ள விலகத் தொடங்கும். உங்களின் தேவைக்கு அதிகமாகவே நீங்கள் கேட்கும் அல்லது தேடும் இடத்தில் பொருளாதார உதவிகள் கிடைக்கப் பெறும். மேலும் ஏழரைச் சனியின் தாக்கமும் 75% குறையத் தொடங்கும். 

மாணவர்களுக்கு சனி பகவான் துலாம் வீட்டில் இருந்தபோது கொடுத்த தொல்லைகளைவிட இப்போது தொல்லைகள் குறைவதோடு, எல்லாவகையிலும் ஏற்றம் உண்டாகும்.சென்ற முறை அவர் துலாம் ராசியில் சஞ்சரித்தபோது உங்களின் கல்வி சம்பந்தப்பட்ட கற்பனைக்கோட்டையைத் தகர்த்தெரிந்தார். ஏனெனில் அவரது மூன்றாம் பார்வை காரிய ஸ்தானமான முன்றாமிடத்திற்கும் தொழில் ஸ்தானமான 10மிடத்திற்கும் ஏற்பட்டதால், உங்களின் முயற்சி மற்றும் ஆர்வம் போன்றவை விழலுக்கு இறைத்த நீராய் போய்விட்டது . ஆனால் சனியின் மாற்றம் உங்களின் திறமை மற்றும் ஆர்வத்தை நல்லவிதமாகப் பிரதிபலிக்கும். நீங்கள் 70 %க்கு முயற்சி எடுத்தால் 80% கிடைக்கும் அளவுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும். இத்தகைய நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு வரும் ஆண்டு பிறப்குதியிலிருந்தே ஏற்படும். பத்தில் சஞ்சரிக்கும் குருவானவர் உங்களின் கலவி சம்பந்தப்பட்ட முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவார்.

அரசியல்வாதிகள் உங்கள் துறையில் பொறுமையும் தன்னடக்கத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். அதன்பிறகு உங்கள் காட்டில் மழைதான். காரணம் சனியின் பாதிப்பு மட்டுமே உங்களுக்கு சற்று கடினமாக இருக்குமேயன்றி குரு மற்றும் கேதுவின் சஞ்சாரம் திருப்திகரமாகவே இருக்கும். இதன்பயனாய், நீங்கள் உங்கள் வட்டாரத்தில் உங்கள் சொல்வாக்கையும் செல்வாக்கையும் எளிதில் நிலை நிறுத்த முடியும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் சொல்லுக்கு மதிப்பு ஏற்படும். உங்களின் அரசியல் பயணத்திற்கு, உங்கள் குடும்பமோ அல்லது உங்கள் வாரிசோ ஒரு குறுக்கீடாக இருக்காது. உங்களுக்கு மேல் உள்ளோரின் அனபும் அரவணைப்பும் தாமாகவே உங்களைத் தேடிவரும். பொருளாதார நிலையில் ஏற்றமும் வளர்ச்சியும் ஏற்பட சனி பகவானின் பங்கும் வரும் ஆண்டு ஜூலை மாதத்திற்கு மேல் ஒரு கருவியாகப் பயன்படும்.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் சஞ்சாரம் செய்து மிக நன்மையான பலன்களை கொடுக்கப் போகிறார். பலவிதமான நன்மைகள் எதிர்பாராதவிதமாக பலவழிகளிலிருந்தும் வந்து சேரும். சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு அரசாங்க உதவி கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசாங்க கல்விக்கடன் கிடைத்து படிப்பை நல்ல முறையில் தொடர முடியும்.வேற்று இனத்தவர், வேற்று மொழி பேசுபவர் , வேற்று மதத்தினர் மூலம் பல நன்மைகள் தற்போது உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. 

சிலர் புது ஆடை ஆபரணங்கள் வாங்குவர். எதிர்பாராத பண வரவு கிடைப்பதால், பழைய கடன்கள் அடைபடும்.கடன் சுமை குறையும். மூத்த சகோதரர் நன்மை அடைவார்கள். உங்களுக்கு மூத்த சகோதரர்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். சிலர் புதிய சொத்துகள் , புதிய வண்டி வாகனங்கள் வாங்குவர். கடந்த காலத்தில் கோர்ட் கேஸ்கள் என்று அலைந்துகொண்டிருந்தவர்கள் அந்த தொல்லைகள் நீங்கி நிம்மதி அடைவார்கள். அந்த வழக்குகளில் தீர்ப்பு வருமானால், அது உங்களுக்கு சாதகமாகவே வரும். 

ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3ம் பார்வையாக உங்கள் ராசியையே பார்க்கிறார். இதன் காரணமாக உங்கள் மனம் உற்சாகத்தில் மிதக்கும். முகத்தில் பொலிவும் உடம்பில் சுறுசுறுப்பும் இருக்கும். மனோபலம் அதிகமாகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கும் செயல்திறனும் புத்திகூர்மையும் அதிகமாகும். அதுபோல ராகு பகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தைப் பார்க்கிறார். தந்தை மேனமையடைவார். தந்தை வழி உறவினர்களால் எதிர்பாராத லாபம் இடைக்கும். எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ,எதிலும் வெற்றி, அதன்மூலம் மன மகிழ்ச்சி கிடைக்கும். கணவன்-மனைவி உறவு சிறக்கும். அனுகூலமான செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் பதவிகள் கிடைக்கும். புதிய நணப்ர்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், அவர்களால், தக்க சமயத்தில் தகுந்த உதவிகள் கிடைக்கும். விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவீர்கள்.

இனி கேதுவின் சஞ்சார பலன்களைத் தெரிந்துகொள்வோம். கேதுபகவான் தனது 5-ம் இடத்து சஞ்சாரத்தின் மூலம் புத்திரர் வழியில் சஞ்சலத்தை ஏற்படுத்துவார். உங்கள் புதல்வர்கள் வேற்று மத்தவரையோ அல்லது வேற்று இனத்தவரையோ திருமணம் செய்துகொள்வர் .புத்திரர் வழியில் செலவினங்களும் அதிகரிக்கும். இக்காலத்தில் போதைப்பொருள்களைப் பழக்கப்படுத்திக்கொள்வீர்கள்.

அந்த விஷயத்தில் 5 ம் இடத்திலுள்ள கேது உங்களை படுகுழியில் தள்ளிவிடாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்வது அவசியம். உங்களுக்கு ஆன்மீக சிந்தனையும் கடவுள் பக்தியும் அதிகமாகி உங்களை ஞான மார்க்கத்தில் ஈடுபடுத்தவும் வாய்ப்புள்ளது. அதனால் தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவது உங்களால் முடியும். இந்த சமயத்தில் பெரியோர்கள் ,ஞானிகளின் சந்திப்பும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

உங்கள் பூர்வீகச் சொத்து எளிதில் கைக்கு வரமுடியாது. அதை அடைவதில் சண்டை சச்சரவுகளும் பிரச்சினைகளும் ஏற்படும். ராகு 11ல் இருந்தாலும் கூட கேது 5ல் இருந்துகொண்டு சூது, லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் பணம் வருவதை தடை செய்துவிடுவதால், கிடைப்பது சொற்ப லாபமாகவே இருக்கும். அந்த சொற்ப லாபத்தில் மயங்கி சூது வழிகளையே பெரிதாக நம்பி வாழ்ந்தால் கைப்பொருளையும் இழக்க வேண்டி வரும். லாகிரி வஸ்துக்களும் உங்கள் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்துவிடும். 

அரசு சம்பந்தமான துறைகளில் இழுபறி நீடிப்பதால், வெற்றி தாமதமாகவே கிடைக்கும். உங்களில் சிலர் மந்திர தந்திர விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டமின்றிக் கவனம் சிதறும். சிலர் காதல் விவகாரங்களில் சிக்கிக்கொண்டு அவஸ்தைப்படுவது மட்டுமின்றி காதல் தோல்வி ஏற்பட்டு மனம் வாடவும் வாய்ப்புண்டு. கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படலாம் என்பதால், பூரண ஓய்வில் இருக்கவேண்டியது அவசியம். அத்துடன் மருத்துவர் ஆலோசனையிலும் மருத்துவப் பாதுகாப்பிலும் இருக்கவேண்டியது அவசியம்.

கேது தனது 3ம் பார்வையால் உங்கள் 7 ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் பலனாக உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். மனைவி கர்ப்பிணியானால் கவனம் மிகவும் அவசியம். மனைவி வழி உறவினர்களிடையே ஏதாவது பிரச்சினைகள் தோன்றினால், அதில் நீங்கள் தலையிடவேண்டாம். அப்படி அவசியம் ஏறப்ட்டு தலையிட நேர்ந்தாலும் மிகவும் ஜாக்கிரதையாக பிரச்சினைகளைக் கையாளாவிட்டால், பிரச்சினைகள் உங்கள் மீதே திரும்பிவிடும் நிலை ஏறபடலாம். புதிய நண்பர்கள் கிடைத்து அவர்கள் மூலம் உதவிகளும் கிடைக்கலாம். 

சிலருக்கு புதிய கூட்டாளியும் கிடைத்து புதிய கூட்டுத் தொழில் உருவாகவும் வாய்ப்புகள் உண்டு. மேலும் கேது பகவான் தனது 11-ம் பார்வையினால், உங்கள் 3-மிடத்தைப் பார்க்கிறார். இதன்பலனாக உங்கள் மனோபலம் அதிகரிக்கும். எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் துணிவு பிறக்கும். இளைய சகோதரர்கள் மேன்மையடைவதோடு உங்களுக்கும் உதவியாக இருப்பார்கள். காது சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம். குலதெய்வ வழிபாடு சிறப்படையும்.

பொதுவாக கேதுவின் 5-ம் இடத்து சஞ்சாரம் தொழில் பிரச்சினைகளையும் தொல்லைகளையும் கொடுக்கும். தொழில், வியாபாரம் நிதானமாக முன்னேறும். தேவைக்கேற்ற வருமானம் கொடுக்கும். பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வம்பு வழக்குகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏறப்டும். உறவுகள் பகையாகலாம். சரியான நேரத்துக்கு உண்ணவோ உறங்கவோ முடியாது. புதிய நட்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். தீர்த்த யாத்திரை மற்றும் ஆன்மீகப் பயணங்கள் தொடர வாய்ப்புண்டு.

பரிகாரம்:

ஆகஸ்டு மாததுக்குப் பின் குருவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை ஆலயம் சென்று வழிபட்டு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து கொண்டக்கடலை மாலையிட்டு வணங்கவும். கேது பகவானின் அருளைப் பெற , வினாயகரை வழிபடவும். வினாயகர் கோவிலை சுத்தம் செய்யவும். . சனியின் சஞ்சாரம் சரியில்லாததால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரனை எள்தீபம் ஏற்றி வழிபடவும். காக்கைக்கு தினந்தோறும் அன்னமிடவும். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும். வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் உதவி செய்யவும். உங்கள் தொல்லைகள் தீர்ந்து மன அமைதி ஏற்படும்.

அனைத்து இராசிகளுக்கும்.
மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்
சிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்
தனுசுமகரம்கும்பம்மீனம்