Breaking News

புலிகளுக்கு ஆதரவாக கருத்து; வழக்கில் இருந்து வைகோ விடுதலை



இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்தமைக்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் வைகோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் ஈழத்தில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றிய வைகோ மற்றும் அப்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் அவைத் தலைவராக பதவி வகித்து தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தில் உள்ள மு.கண்ணப்பன் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் மு.கண்ணப்பன் மீதான குற்றச்சாட்டு கைவிடப்பட்டதுடன் வைகோ மீதான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்றன.

கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கியூ பிரிவு பொலிஸார் சார்பாக 15 சாட்சிகள் மற்றும் 35 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

எனினும் குறித்த வழக்கில் அரசு தரப்பில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிருபிக்கப்படாமையினால் வைகோவை விடுதலை செய்து மாவட்ட அமர்வு நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.