சிறீதரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
கிளிநெச்சி பச்சிலைப்பள்ளி - கரந்தாய் கிராமத்திலிருந்து தென்னை அபிவிருத்தி ச்சபையினால் வெளியேற்றப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தில் வாழ்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 2010 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டதாகவும் இதுவரை அவர்களுக்கு எந்தவொரு தீர்வும் வழங்கப்படவில்லையெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
40 ஆண்டுகளுக்கு அதிகமாக குறித்த கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்களின் வீடுகளை 2010 ஆம் ஆண்டு தென்னை அபிவிருத்திச் சபையினர் கனரக வாகனங்களால் தரைமட்டமாக்கி அங்கிருந்து வெளியேற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்புப் பொதுக்கூட்டத்தில் அனைத்து இணைத்தலைவர்களும் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோரும் மேற்கொண்ட தீர்மானம் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் வழங்கிய பணிப்புரை மற்றும் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்கள் என்பன தென்னை அபிவிருத்திச்சபையினால் கவனத்தில் கொள்ளப்படவில்லையென குறிப்பிட்டுள்ளார்.
காலாகாலமாக வாழ்ந்த மக்களை அரச நிறுவனம் துன்புறுத்தி வெளியேற்றுவது நல்லாட்சியின் கீழ் வேதனை தருவதாகவும் குறித்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.